தோழி!
வழியோரம் நீபோகக் கண்டேன் -இது
வான்மதியின் ஊர்வலமோ என்றேன்.
வான்மதியின் வடிவான முகமும்-செவ்
வரிக்கொவ்வை வனப்பான இதழும்,
கவிபாடச் சொன்னதடி என்னை-இனி
கனவிலேனும் காண்பேனோ உன்னை.
முழுமதியை முகமாக்கிக் கொண்டாய்-உன்
முள்விழியால் எனைமெல்லத் தின்றாய்.
இதழ்மலர்ந்த போதெல்லாம் நெஞ்சம்-உன்
இதயத்தில் புகத்தேடும் தஞ்சம்.
தனங்களில் முகம்புதைத்து அழவோ?-உன்
தளிர்மேனி சிலைஎன்று தொழவோ?
கண்வீச்சில் சொல்லிவிடு சேதி-என்
காதலுக்கு அதுபோதும் தோழி.
காத்துக்கிடக்கிறேன் சொல்வாயா?-தினம்
கனவில் எனைக்கட்டிக் கொள்வாயா?
இதயத்தில் போராடித் தோற்பேன்-நீ
இல்லையெனச் சொன்னாலும் ஏற்பேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக